Dinamalar
30th March 2011 கோலாலம்பூரில் சர்வ சமயப் பிரார்த்தனை
சிங்கப்பூர் : இயற்கையின் நியதியை, நெறியைப் பின்பற்ற வேண்டிய மனிதன், உலகத்தைப் பாதுக்காக வேண்டிய கடமையும், பொறுப்பும் உள்ள மனிதன் இதிலிருந்து மாறுபடும் போது இயற்கை தன்னைப் பாதுகாத்துக் கொள்ள முயலுகிறது. இதன் விளைவுதான் ஆழிப்பேரலை- சுனாமி - பிரளையம் எல்லாம். ஜப்பானில் இதுதான் ஏற்பட்டு ஆயிரக்கணக்கான உயிர்களை- உடைமைகளை- பொருட்சேத இழப்புக்களை ஏற்படுத்தியிருக்கிறது. இது இயற்கையால் உலகத்திற்கு விடப்பட்ட எச்சரிக்கை என ஜெகத்குரு மகா மகரிஷி பரஞ்சோதியார் சிங்கப்பூர் லிட்டில் இந்தியா பகுதியில் அமைந்துள்ள ஆரிய சமாஜ அரங்கில் சிங்கப்பூர் உலக சமாதான அறக்கட்டளை நடத்திய சத்சங்கத்தில் அருளாசியுரையாற்றுகையில் குறிப்பிட்டார்.
அவர் மேலும் பேசுகையில் இயற்கையின் சீற்றங்களுக்கு அடிப்படைக் காரணம் புவி வெப்பமயமாதலே என்றும் இதனைத் தடுப்பதற்குரிய வழிகளை உலகளாவிய நிலையில் சர்வதேசத் தலைவர்களால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்கு ஒவ்வொருவரும் தங்கள் பங்களிப்பைச் செய்ய வேண்டியது இன்றியமையாக் கடமை எனவும் குறிப்பிட்டார்.
இந்தியாவில் தேசிய நீர்வழிச் சாலை அமைத்திட தாம் சங்கல்பம் மேற்கொள்ளயிருப்பதாகவும் குறிப்பிட்ட மகரிஷி வளிமண்டலம் மாசுபடுவதைக் கட்டுப்படுத்த வேண்டிய அவசர- அவசியக் கடமை ஒவ்வொருவருக்கும் உண்டு என்றார்.
வருமுன்னர் காக்கின்ற வழிமுறைகளையே ஞானிகள் மேற்கொள்கின்றனர் என்றும் குறிப்பிட்டார்.
முன்னதாக சிறுமியர் சுடர் விளக்கேந்தி அணிவகுத்து வர பூரணகும்ப வரவேற்பளிக்கப்பட்டது. உலக சமாதான ஆலய மரபுப்படி குருகீதம் பாடப்பட்ட பின் அஷ்ட தீபம் ஏற்றப்பட்டு நிகழ்வு தொடங்கியது. முதல் நிகழ்வான ஜப்பான் நிகழ்வுக்காக ஒரு நிமிட அமைதிப் பிரார்த்தனை அனுஷ்டிக்கப்பட்டது.
சிங்கை உலக சமாதான அறக்கட்டளையைச் சார்ந்த லட்சுமிதாஸ் வரவேற்புரையாற்றினார். பின்னர் பஞ்ச பூத சர்வ சித்தி யாகம் நடத்தப்பட்டது. உலக சமாதான அறக்கட்டளை (இந்தியா) பொதுச் செயலர் கே.எஸ்.சுந்தர்ராமன் சிறப்புரையாற்றினார். நிகழ்வில் திரளான சிங்கை- மலேசியாவைச் சேர்ந்த அவரது சீடர்கள் கலந்து கொண்டனர்.
-நமது செய்தியாளர் வி.புருஷோத்தமன்
கோலாலம்பூர் : அண்மையில் ஜப்பானில் நிகழ்ந்த சுனாமியால் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு, ஆன்மாக்களுக்கு அமைதி வேண்டியும் உடைமைகள் உள்ளிட்ட பேரிழப்புகளுக்கு அனுதாபம் தெரிவித்தும் கோலாலம்பூர் பியூர் லைப் சொசைட்டி மண்டபத்தில் மார்ச் 26ம் தேதியன்று மாலை சர்வ சமயப் பிரார்த்தனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக உலக சமாதான ஆலய அறக்கட்டளை நிறுவனர் மகரிஷி பரஞ்சோதியார், மலேசியாவிலுள்ள ஜப்பானியத் தூதரக உயரதிகாரியும் அமைச்சருமான கோய்ச்சி இட்டோ, பியூர் லைப் சொசைட்டித் தலைவர் டத்தின் அன்னை மங்களம் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் இந்து, புத்த, கிறித்துவ, இஸ்லாமிய, சீக்கிய, பகாய் உள்ளிட்ட சர்வ சமயத் தலைவர்களும் மலேசிய உலக சமாதான ஆலய ஞானாசிரியப் பெருமக்களும் கலந்து கொண்டனர்.மகரிஷி பரஞ்சோதியார் சிறப்புப் பிரார்த்தனையும் தியான வழிபாடும் நடத்தி ஜப்பான் பேரிடர்த் துயரில் உயிர் நீத்த ஆன்மாக்கள் அமைதி பெறவும் நாடு மறுவாழ்வு பெறவும் வாழ்த்தினார். அன்னை டத்தின் மங்களம் சிறப்புரையாற்றினார். பேரிடர்த் துயர உதவி நிதியாக 20,000 வெள்ளி நன்கொடை வழங்கப்பட்டது. மிக மனநிறைவான சர்வ சமயப் பிரார்த்தனைக் கூட்டமாக இது அமைந்ததென பங்குபெற்றோர் மகிழ்வெய்தினர்.
- நமது செய்தியாளர் வி.புருஷோத்தமன்