கோலாலம்பூரில் ஒருங்கிணைப்பு நாள் விழா
கோலாலம்பூர் : கோலாலம்பூர் பிரிக்பீல்டு கலா மண்டபத்தில் ஏப்ரல் 04ம் தேதி மலேசிய உலக சமாதான ஆலயத்தின் சார்பில் உலக அமைதி தின ஒருங்கிணைப்பு நாள் விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. 'அன்பு மயமான இறைவனை, கருணையின் வடிவான இறைவனை உணர்வோமானால் நாமும் அன்பு மயமாவோம், கருணையாளராக உயர்வோம். எதிர்காலத்தில் பருவ மாற்றம் மட்டுமல்ல துருவ மாற்றமும் நிகழவிருக்கிறது. முன்னரும் இது நடந்திருக்கிறது, லெமூரியாக் கண்டத்தின் நிலை அதுதானே? வருமுன்னர் காத்திடுவோம். உயிரை மேல் நோக்கிச் செல்ல வழிவகுத்துக் கொடுப்பது தமிழ்மொழி. 'ழ' என்ற எழுத்தை நாக்கை மடித்து 21 முறை சொன்னாலே உங்களிடம் மாற்றம் பிறக்கும். மூளையின் இரு பக்கங்களும் சம்நிலை பெறும். அழித்துத் திருத்தாமல் உணர்த்தித் திருத்துவதே மகான்களின் பணி. புதியதோர் உலகம் காண்போம் வாரீர்...இன்னும் ஓராயிரம் வருடங்களுக்குப் பின்னரே 11.11.11 வரும். எனவே இந்த நவம்பர் 2011-11ம் தேதி 11 மணி 11 நிமிடத்திற்கு ஒரு நிமிட அமைதி காப்பது ஒரு யுகப் புரட்சி. உலகம் முழுவதும் அவரவர் நாட்டு நேரப்படி 11 மணி 11 நிமிடத்திற்கு அமைதி அனுஷ்டிக்கும் போது நாள் முழுவதும் இவ்வேள்வி நடந்து கொண்டே இருக்கும். வருமுன்னர் காக்கும் மகத்தான பணி இது. இம்மெளனப் புரட்சியால் மாபெரும் நன்மை விளையும், இது திண்ணம்' என இவ்விழாவில் சிறப்புரையாற்றிய மகரிஷி பரஞ்சோதியார் குறிப்பிட்டார்.
விழாவில் கலந்து கொள்ளும் முன், புத்த, கிறித்துவ, இந்து, சீக்கிய, தாவோயிச சமயங்களின் மலேசிய கான்சுலேடிவ் கவுன்சில் தலைவர் டாக்டர்.தாமஸ் பிலிப்ஸ், பரஞ்சோதியாரை சந்தித்து இவ்வமைதி இயக்கத்திற்குத் தமது ஆதரவைத் தெரிவித்ததோடு தமது அமைப்புக்கள் ஒரு நிமிட அமைதி அனுஷ்டிக்க ஏற்பாடு செய்வதாக உறுதியளித்தார். இவ்வளாகத்திலுள்ள தலைமை புத்த பிக்குவும் சந்தித்தார். அமைதிக் குழுத் தலைவர் டாக்டர் அமீர் பாரித் இசாக் அப்போது உடனிருந்தார்.விழாவில் முன்னுரையாற்றிய உலக சமாதான அறக்கட்டளைப் பொதுச் செயலாளர் கே.எஸ்.சுந்தரராமன் பேசுகையில் ஜூன் மாதத்தில் பரஞ்சோதியார் பல வெளிநாடுகளுக்குச் செல்லவிருப்பதாகவும், அப்போது அமெரிக்க அதிபர் ஒபாமாவையும், ஐ.நா., சபைப் பொதுச் செயலரையும் சந்தித்து இவ்வியக்கத்திற்கு ஆதரவு கேரவிருப்பதாகவும் தெரிவித்தார். விழாவில் ராக தீப மெல்லிசைக் குழுவினரின் பக்திப் பாடல்கள் பாடப்பட்டன. மிலினியம் ஆர்ட்ஸ் கிரியேஷனின் நடன மணிகள்கெளசல்யா, கோபால கிருஷ்ணன் ஆகியோர் பரதமும், மயிலாட்டமும் ஆடி மகிழ்வித்தனர். ஸ்ரீசக்ர பீடாதிபதி ஜெயப்பிரகாச சுவாமிகள் மகரிஷிக்குப் பொன்டை போர்த்தி தாமும் இவ்வமைதி இயக்கத்தில் தமது இயக்கதினரோடு கலந்து கொள்ளுவதாக அறிவித்தார். குரு கீதம் பாடி அஷ்ட தீபம் ஏற்றித் துவங்கிய இவ்விழாவில் பெருந்திரளான மகரிஷியின் சீடர்கள் கலந்து கொண்டனர். விழாவில் சிறப்பாகப் பணியாற்றியவர்களுக்கு மகரிஷி, பொன்னாடை அணிவித்துப் பாராட்டினார். மலேசியச் செயலாளர் வாசு நன்றி நவில விழா இனிதே நிறைவு பெற்றது. மகரிஷி ஒவ்வொருவரையும் தனித் தனியாக ஆசிர்வதித்தார்.
- நமது செய்தியாளர் வி.புருஷோத்தமன்





